scorecardresearch

2 மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை : அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்

10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது.

2 மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை : அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்

கோவை பேரூர் அருகே மக்னா யானைக்கு இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வனத்துறை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து மக்னா என்ற ஒற்றை யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5-தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, 6-ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இதனிடையே 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு பகுதியில் சுற்றி நேற்று கோவை பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது.

பின்னர் மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே புதூர் பகுதிக்கு சென்றது. அந்தப் பகுதியில் உள்ள முள் புதரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வலம் வந்தது. பின்னர் ஒன்பது மணிக்கு மேல் அந்தப் பகுதியில் இருந்து சென்று இடையர்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் சென்றது.

அதன்பிறகு இன்று அதிகாலை மூன்று மணி வரை வனத்துறை பார்வையில் இருந்த யானை கண்காணிப்பில் இருந்து விலகியது. பின்னர் இன்று காலை புட்டு விக்கி செல்வபுரம் தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து பேரூர் பகுதிக்கு வந்தது. பேரூர் பகுதியில் உள்ள எஸ் எம் எஸ் கல்லூரி அருகே உள்ள புதருக்குள் மறைந்தது. தொடர்ந்து வனத்துறையினர் இந்த பகுதியில் வைத்து யானையை ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டனர்.

மக்னா ‌யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி துவங்கியது. அதற்காக காட்டு யானை இருக்கும் பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட முன்னாள் கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையில் மயக்கம் ஊசி செலுத்துவதற்காக துப்பாக்கியுடன் சென்றனர். அதேபோல இந்த குழுவில் சுகுமாரன், பிரகாஷ் ஆகிய மருத்துவர்களும் இருந்தனர்.

யானை தப்ப முயற்சி செய்ததால் வனத்துறையினர் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட முறை பட்டாசு விட்டனர். வனத்துறை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் யானைக்கு 4 முறை ஊசி செலுத்த சுட்டனர். இதில் இரண்டு முறை ஊசி யானையின் மீது பட்டது.

மக்னா யானைக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கும்கி சின்னத்தம்பி யானை மக்னா யானை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. தற்போது மக்னாயானை மயக்க நிலைக்கு சென்று கொண்டுள்ளது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu coimbatore magna elephant forest officers action

Best of Express