கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் வரும் ஜூலை 15"ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படுகின்றது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையிலிருந்து கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் , திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வரும் ஜூலை15 ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படுகின்றது. கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்தபடுகின்றது.மொத்தம் 39 கி.மீ தூரம், 32 நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள்,சக்தி சாலையில் 14 ரயில் நிலைங்கள் அமைய இருக்கின்றது. இந்த பாதையில் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்ட மிடப்பட்டு இருக்கின்றது. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கொடுத்த பின்னர், ஒன்றிய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த பட இருக்கின்றது. கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின் இடது புறத்தில் மெட்ரோ ரயில் பாதைக்காற பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக செயல்படுத்தபடுகின்றது தெரிவித்தார்.
நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம் சாலையிலும் அமைக்கப்படுகின்றது எனவும் மெட்ரோ பணிகள் துவங்கியதில் இருந்து 3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெட்டியிலும் 250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக
கொண்டு திட்டமிட்டு இருப்பதாகவும் , திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது எனவும், சுரங்க பாதைகள் எதுவும் திட்டமிடப்பட வில்லை எனவும் ஒரு சில இடங்களில் நில எடுப்பு இருக்கும் எனவும், இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் அதிகாரிகள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”