கோவையில் அமரர் ஊர்தி வராததால் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து கார் மூலம் உடலை எடுத்துச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டியை சேர்ந்த 67வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். பின்னர் மூதாட்டியின் உடலை பிணவறையில் வைத்திருந்த போது அமரர் ஊர்தி வரவேண்டும் என்பதால் உடலை ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்.
அப்போது மூதாட்டியின் மகன் மது போதையில் உடனடியாக அமரர் ஊர்தி வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த மகன் காவலர்கள் பணி நேரம் மாற்றும் போது அவரது காரை பிணவறை அருகே எடுத்து வந்து மூதாட்டி உடலை கார் மூலம் எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்த காவலர்கள் காரை துரத்தி பிடித்து மீண்டும் அழைத்து வந்து அறிவுரை கூறி உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிணவறை அருகே பரபரப்பான சூழல் நிலவியது. தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.