பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் பொதுமக்கள் மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில், குடிநீர், தார் சாலை, மழைநீர் வடிகால், பேருந்து நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகம் இவற்றை முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதுடன், அடிப்படை தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
குறிப்பாக, காவேரி நகர், ரங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலைகள் இல்லாததால் மழைநீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. இதனிடையே இன்று அதிகாலை பட்டணம் ஊராட்சியில் தேங்கிய மழைநீரில் நாட்டு நட்டு பகுதி மக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தார் சாலை அமைத்து, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.