கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்த காவல் துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை பின் வருமான வரித் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
கோவை, கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். ஆனால் அவரது பெயர் சத்யவான் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை சோதனை செய்த காவல் துறையினர் அவர் வைத்து இருந்த பையில் சோதனை மேற்கொண்ட போது செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட இருந்த பார்சலில் 35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் அதனை கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனை அடுத்து அதற்கான ஆவணங்களை கேட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 35,00,000 (ரூபாய் முப்பத்தைந்து லட்சம்) பணம் மற்றும் சத்யவானை சட்ட பூர்வ நடவடிக்கைக்காக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி (Income Tax officer Investigation) மதி ஆனந்திடம் ஒபப்டைத்தனர். தற்போது அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.