/indian-express-tamil/media/media_files/2025/05/26/CMzsTeIINcpYFkCq9rIx.jpg)
கோவையில் பெய்து வரும் தொடர் கன மழையால் பில்லூர் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. 100 கனஅடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து நேற்று 86 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர துவங்கி இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.60 அடி உயர்ந்துள்ளது.கனம் மழையின் காரணமாக ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது, அனையில் அடிவாரத்தில் 128 மி.மீ., அணைகட்டு பகுதியில் 120 மி.மீ. மழை பொழிவு பதிவாகியுள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையில், அணையின் தற்போதைய நீர்மட்டம் - 26.60 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து கோவை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவைவிட, 65.08 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகின்றன. அணையின் நீர்மட்டம் கன மழையின் காரணமாக விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கபடுகிறது
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.