கோவையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில், பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன் படியும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும்,ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும்.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ரூபாய் 770 சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும் இதன் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது எந்த விதமான பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.