கோவையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்தி வரும் காவலதுறை, குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்தவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். இதில் இளம் பெண்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் தகவல்.
கோவை மாநகரில் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் இரண்டு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதே சமயம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவை மாநகரில் குற்ற செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30"க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில்,
கோவை மாநகரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் சில தினங்களுக்கு முன் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக குழுவை உருவாக்கி சண்டையிட்டுக் கொள்வது ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் 15"பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது
மேலும் இவர்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள், இவர்களுடன் நெருக்கமாக பழகக் கூடிய இளைஞர்கள் ஆகியோரின் அடையாளம் கண்டு வருகிறோம். இவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இச்செயல்களில் ஈடுபடும் சில நபர்களுக்கு கஞ்சா விற்கும் பழக்கங்களும் உள்ளது,
அதே சமயம் ஒரு சில இளம்பெண்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிலர் தலைமறைவாக உள்ளனர் என கூறியுள்ள அவர் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூடிய விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“