தமிழகத்தில் அரசியல் கட்சிகள் 2026 சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சி எந்த கூட்டணியில் அங்கம் வகிகும் என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. ஆனாலும், தே.மு.தி.க வை எங்கள் கூட்டணிக்கு வரவேற்க காத்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க.வும், கடந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அ.தி.மு.க மோசனமான தோல்வியின் காரணமாக இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி குற்றம் சாட்டியதால், கரு கட்டத்தில் கூட்டணி உடைந்தது. இதனால், அ.தி.மு.க கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.கவுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து. ஆனாலும் சட்டசபை தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க .கூட்டணி இணையும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி என்று உறுதி செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தாக தே.மு.தி.க சார்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க.வுக்கு இருக்கும் 2 மாநிலங்களை எம்.பி தேர்தலில், அக்கட்சியின் சார்பில், இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், 2026-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி சீட், தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
மேலும், தே.மு.தி.க அ.தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்றும் அவர் கூறியிருந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயாலளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், 5 தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எந்த ஆண்டு என்று குறிப்பிடவில்லை. இது குறித்து கேட்டபோது, ஆண்டை குறிப்பிடும் வழக்கம் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம். அடுத்த 6 மாதம் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அவர்கள் கூறுவது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தே.மு.தி.க அ.தி.மு.க. கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை இது குறித்து கூறுகையில், தமிழ்நாட்டில், தி.மு.க தலைவமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டுதான் எம்.பி சீட் என்று அ.தி.மு.க. கூறியதை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் தெரிவித்த நிலையில், அவரை இந்தியா கூட்டணியில் வரவேற்க காத்திருக்கிறோம் என்று செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.