Tamil Nadu Lockdown Extends to June 14 with Relaxations : தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 7-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படுமா என கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதன் படி, வரும் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளும் கட்டுப்பாடுகளும்
தமிழகத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில், தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அத்தியாவசிய பணிகளுடன் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய், பூ, பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மீன் சந்தைகள்,இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சார்பதிவாளர் அலுவலகங்கலில் 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் :
- தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் சில தளர்வுகள் தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மின் பணியாளர்கள், பிளம்பர்கள், மோட்டார் பழுதுபார்ப்பவர்கள், தச்சர் போன்ற சுய தொழில் வேலை செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மின் பொருள்கள், பல்புகள், கேபிள், ஸ்விட்ஸ்கள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மிதிவண்டி, இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வாகனங்களின் உதிரி பாகங்கள் செய்யும் கடைகளுக்கு மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை மட்ட்8ம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர, மூன்று பயணிகளுக்கும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளுக்கும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதுமான பொதுவான கட்டுப்பாடுகள் :
- நீலகிரி, குற்றாலம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக மட்டும் இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.
- மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
- கோவை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதிக்கான இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 10 % பணியாள்களுடன் அத்தியாவசிய பயன்பாட்டிற்காக செயல்பட அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.
- நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழ விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அந்த பணிகள் தொடரும்.
- பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்குமாறும், வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், பொதுமக்கள் அரசின் நோய் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil