Tamilnadu Covid-19 New Guidelines : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத்தலங்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரு மாதங்களாக தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில பிரமுகர்களையும் கொரோனா தொற்று தாக்கி வருகிறது. இதனால் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் கோவில்களில் திருவிழா மற்றும் மதம் சார்த்த அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மார்கெட்டுகளில் சில்லரை வணிகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி சமூக இடைவெளி முக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தியேட்டர்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய தடையும் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10-ந் தேதி (இன்று) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட்டிருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு 8 மணிவரை வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுதலங்களில் திருவிழா மற்றும் மதம் சார்த்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு ) மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரை பகுதிகள் மூடப்படும் என்றும், தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் 7 நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil