சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கான குத்தகை பாக்கி 1553 கோடி ரூபாய் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
ஆனால் இந்தத் தொகையை செலுத்த கூறி திருவல்லிக்கேணி- மயிலாப்பூர் தாசில்தார் அனுப்பிய நோட்டிஸ் மீது அழுத்தம் தரபடமாட்டது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி கொடுத்திருப்பதுதான் ஹைலைட்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு கடந்த 1935 ம் ஆண்டு சுமார் 15 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. குத்தகை காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு புதிய குத்தகை ஒப்பந்தம் தமிழக அரசுடன் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 2015 ஆம் ஆண்டு வரை குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்றும் 2000 ஆவது ஆண்டுவரை மாதம் 50 ஆயிரம் குத்தகையும் 2000 ஆண்டுக்கு பிறகு சந்தைமதிப்பில் குத்தகையை மாற்றி அமைப்பது என இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளபட்டது.
இதனை அடுத்து 2000 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 22 கோடி ரூபாய் தர தமிழக அரசு கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவிட்டது. இது தொடர்பான அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. 1995 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 20 ஆண்டு ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து.
இந்நிலையில் புதிய குத்தகையை புதுப்பிக்கக்கோரி கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அப்போது 32 லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி செலுத்தும் படி கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த தொகை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் செலுத்தபட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் குத்தகை பாக்கி இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மைலாப்பூர் திருவல்லிக்கேணி வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில்1553 கோடி ரூபாய் குத்தகை பாக்கி இருப்பதாக நோட்டீஸ் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நோட்டீஸை எதிர்த்து கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் பழனி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களின் சங்கம் லாப நோக்கற்ற அமைப்பு ஆகும். கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும் அமைப்பு ஆகும். எங்கள் சங்கம் தொடங்கப்பட்ட 80 ஆண்டுகளில் ஈட்டிய மொத்த வருமானம் கூட இந்த தொகை இல்லை.
இந்த குத்தகை தொகைக்காக சங்கத்தின் 8 வங்கி கணக்குகளை வருவாய் துறையினர் முடக்கியுள்ளனர். எனவே வங்கி கணக்கை முடக்கத்தை நீக்க வேண்டும். 1553 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஏற்கனவே செலுத்திய தொகையை விட தற்போது 21 ஆயிரம் மடங்கு அதிகமாக செலுத்த சொல்கின்றனர். இது சட்டவிரோதமானது. எனவே தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர், தாசில்தார் அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர் தரப்பில் முடக்கப்பட்ட வங்கி கணக்கை நீக்க வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் வங்கி கணக்கு தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று கூறுவதாக தெரிவித்தார். வங்கி கணக்கு தொடர்பாக தற்போதைய நிலையே இருக்க வேண்டும். கிரிக்கெட் சங்க வங்கி கணக்கில் இருந்து பணத்தை அரசு எடுக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.