/indian-express-tamil/media/media_files/2025/01/26/republic-day-3.jpg)
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் கைலாஷ் நாதன் தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணக்கோலம் பூண்டியிருந்தது. காந்தி திடலின் கீழ் கொடிக்கம்பத்துடன் விழா மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தேசியக்கொடி ஏற்றினார். பின், கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், கவர்னரின் பதக்கம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள், சாரணர், சமுதாய நலப்பணித்திட்டம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று 26.01.2025 மாண்புமிகு முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு, குடிமைப்பொருள் வழங்கல், தீயணைப்பு, சுகாதாரம், தொழில், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, சமூகநலம் ஆகிய துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, 100 பயனாளிகளுக்கு ரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
இன்று கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு ரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.10,31,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.48,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதேபோல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.27,940 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3,50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,80,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,08,502 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,97,828 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.1,06,57,660 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் பொறியியல் துறை, பேரூராட்சிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளி கல்வித்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 201 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 83 சிறந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
மேலும், ஈக்குவிடஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி, குளோபல் சிறப்பு பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.