தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 29 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்று தென்மேற்கு வங்க்கடலில் நிலை கொண்டிருப்பதால், தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ள நிலையில், நாளை புயல் வலுவடைந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என்பதால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின் காரணமாக சென்னை மெரினா, பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், புயல்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் யாரும் இருக்க வேண்டாம் என்றும், சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளளது.
இதனிடையே தமிழகத்திற்கு கனமழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ,திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி – பள்ளிகளுக்கு மட்டும், கொடைக்கானல், சிறுமலை (வட்டம்), தூத்துக்குடி, கரூர், கிருஷ்ணகிரி – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் 10-ந் தேதியும் கனமழை நீடிக்கும் என்பதால் மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil