Advertisment

அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது; என் படத்தை மிதிக்கும் கால்களாவது சுத்தமாகட்டும் - உதயநிதி ஸ்டாலின்

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது – உதயநிதி ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
udhayanidhi stalin DMK question over PM Modi BJP on electoral promises Tamil News

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை கால் மிதியாக பயன்படுத்தி சிலர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு த.மு.எ.க.ச மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு குறிப்பிட்ட சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சிலர் உதயநிதியின் படத்தை கொளுத்தியும், கால் மிதியாக போட்டு நடந்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவின.

அண்மையில் திருப்பதி லட்டு சர்ச்சையின் போது, ஆந்திர முதல்வர் பவன் கல்யாண், சனாதானம் குறித்து பேசும்போது, உதயநிதியை மறைமுகமாக சாடியிருந்தார். இதற்கு உதயநிதி பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை கால் மிதியாக பயன்படுத்தி சிலர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! 

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன். 

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. 

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. 

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். 

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Udhayanidhi Stalin Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment