/indian-express-tamil/media/media_files/7OGk967wZMGpK5fzZvZN.jpg)
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் விக்னேஷ் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி, படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், விக்னேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே படுகாயமடைந்த டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திட வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டி.ஜி.பி சங்கர் ஜிவால், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூடுதல் ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, ரோந்து வாகனங்களை பயன்படுத்தி மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மருத்துவமனை முதல்வர்கள், பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னையில் உள்ள எழும்பூர், சைதாப்பேட்டை, காந்தி நகர், கே.கே.நகர், அமைந்தகரை, பெரியார் நகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புறக்காவல் நிலையங்களில் சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.