கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பெயரை பரிந்துரைத்துள்ள நிலையில், புயலுக்கு 'ஃபீஞ்சல்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அதிகனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி திருச்சி,கடலூர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“