Advertisment

கூட்டணியில் இருந்தபோது ஆதரவு... இப்போது எதிர்ப்பு... பச்சை துரோகி பழனிச்சாமி : மு.க.ஸ்டான் கடும் தாக்கு

நானும் ஒரு விவசாயி’ என்று பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி என முதல்வர் மு க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin 2303

மு.க.ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலியையும், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜையும் அறிமுகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisment

இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில்,

திருக்குவளையில் பிறந்த தலைவரின் மகனாக, திருவாரூரில் வளர்ந்த தலைவரின் மகனாக, தஞ்சையில் வென்ற தலைவரின் மகனாக உங்களில் ஒருவனாக தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உங்கள் முன் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். நடைபெற இருக்கும் தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். ஏதோ பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் இதை நினைத்துவிடக் கூடாது.

இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பாஜக இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது.

முதலில் நாம் எல்லாரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்களையே, வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதல்வர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு - காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜக பாணி, சர்வாதிகாரம்.

MK Stalin 2

இந்த நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படலாம். ஏன், பா.ஜ.க., மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பாஜக ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள். தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார்.

இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழகத்துக்கு அழிவு, இந்தியாவுக்கும் நல்லதல்ல. அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி பா.ஜ.க.வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்த பழனிசாமி அவர் பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அது தேர்தல் அறிக்கை அல்ல; பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. அவரிடம் அதிகாரம் இருந்தபோது, மத்திய அரசிடம் இருந்து உருப்படியாக எதையாவது பெற்றுத் தந்தாரா?

நான் கேட்கிறேன், பழனிசாமி அவர்களேதிமுக அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறீர்களா? இல்லையே. அதிமுக ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது திமுக. தொல்லை தருவதையே தன்னுடைய அன்றாடப் பணியாக வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது திமுக.

மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டதால்தான் அந்தச் சட்டமே இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக் காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை கொண்டு வருவோம்என்று சொல்வதற்குப் பெயர் என்ன? பித்தலாட்டம்தானே.

மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் பழனிசாமி. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே, அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது மத்திய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா? இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க.-வுக்கான பசப்பு நாடகம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

MK Stalin 2

இங்கு இவர் இப்படி என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா? இல்லை.கருப்புப் பணத்தை மீட்பேன், மீட்டு வந்து 15 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களுக்குத் தருவேன் என்றார். தந்தாரா? 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தாரா? 15 ரூபாயாவது தந்தாரா? இல்லை. இதைக் கேட்டால், உள்துறை அமைச்சர் பேட்டியில் சொல்கிறார். அது, ‘சும்மா தேர்தலுக்காக கூறினோம்என்று சொல்லி முடித்துவிட்டார். அடுத்து, ஒன்று கூறினார்கள், ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லையே.

படித்த இளைஞர்கள் பக்கோடாவிற்கலாம் என்று பிரதமர் பேசுகிறார். உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று கூறினார். ஆனதா? இல்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்கள். இதெல்லாம் கூறியபோது, பழனிசாமி என்ன கூறினார்? “விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். நான் அவர்களுடன் விவாதம் நடத்தத் தயார்என்று கூறினார். நானும் ஒரு விவசாயிஎன்று பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக ஒன்றரை ஆண்டு காலம் உழவர்கள் தலைநகர் டெல்லிக்கு வந்து போராடினார்கள். வெயிலிலும், கடும் குளிரிலும் படுத்திருந்த உழவர்கள் ஏராளமான பேர் பலியானார்கள். அவர்களை எல்லா வகையிலும் சித்திரவதை செய்தது பா.ஜ.க. அரசு.

இது எதற்கும் அஞ்சாமல், பின்வாங்காமல் அவர்கள் நின்றதைப் பார்த்துதான் மூன்று வேளாண் சட்டங்களை இறுதியில் பா.ஜ.க. வாபஸ் வாங்கியது. அப்போது பாஜக அரசு உழவர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அது எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். டெல்லிக்குள் அவர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து இரும்பு முள்வேலி, சாலைகளில் ஆணிப் படுக்கை அமைத்திருக்கிறது பாஜக அரசு. பாகிஸ்தான் பார்டரை விட, மோசமான சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இதுவரை நான்கு உழவர்கள் இறந்துவிட்டார்கள். இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள். ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நிலைமை இதுதான். தமிழ்நாட்டு உழவர்களையாவது நிம்மதியாக இருக்க விட்டாரா பிரதமர் மோடி? அதுவும் இல்லை. காவிரி பிரச்சினையில் பாஜக-வும் அதிமுக-வும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த உங்களால் மறந்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பல பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து, கடந்த டிசம்பர் மாதம் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. பல மாதம் ஆனது. இதுவரை நிவாரண நிதியாக ஒரு சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை பாஜக அரசு. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கோரினோம். ஒரு பைசாகூட வரவில்லை. பாதுகாப்பு அமைச்சர் வந்து பார்த்தார். தருவதாகக் கூறினார், தரவில்லை. நிதி அமைச்சர் வந்து பார்த்தார். தருவதாகக் கூறினார், தரவில்லை. மத்தியக் குழு வந்து பார்த்தது. வாங்கித் தருவதாகக் கூறினார்கள், தரவில்லை. தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரை டெல்லிக்குச் சென்று சந்தித்தார்கள்! அவரும் தருவதாகக் கூறினார், தரவில்லை. ஏன் தரவில்லை? தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு அவர்களுக்கு மனமில்லை.

சமீபகாலமாகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை அறிவித்திருந்தால் பாராட்டலாம். தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்குத் தமிழ்நாட்டு மக்களும் தங்களின் வாக்கையும் தர மாட்டார்கள் என்பது மோடிக்கு தெரியும். அதனால்தான், திமுக மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தைக் கொட்டுகிறார். மாநிலம் மாநிலமாகச் சென்று தி.மு.க.வை விமர்சித்தார். இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தும் அதே பல்லவியைப் பாடுகிறார்.

திமுக மேல் ஏன் அவருக்கு இவ்வளவு கோபம்? இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராகத் தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் தி.மு.க.-வை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பொழப்பை இண்டியா கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை இண்டியா கூட்டணி கலைத்துவிட்டது.

MK Stalin 2

இவ்வளவு நாட்களாக எங்களை உசுப்பிவிட்டு உற்சாகப்படுத்தி வந்தார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், அரசியலமைப்பையும் அவமதித்தால், அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால், இந்த அளவுக்கு கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அவரே கடைசியில் களைத்துப் போய், நேற்று எங்களுக்கு அழைப்புவிடுத்து பொன்முடிக்கு பதவியேற்பு என்றார். அதை முடித்துவிட்டுத்தான் என் பயணத்தையே தொடங்கினேன்.

எனவே, ஆளுநர் மாளிகையில் இருந்துதான் என்னுடைய பிரச்சாரமே தொடங்கியிருக்கிறது. ஆளுநர் மாளிகையிலிருந்து தொடங்கியிருக்கும் இந்த பிரச்சாரம், குடியரசுத் தலைவர் மாளிகை வரைக்கும் போகப்போகிறது. புறப்படும்போது, போய் வருகிறேன் என்று சொல்லிட்டு, இன்றைக்கு என்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறேன் என்று சொல்லி ஆளுநருக்குக் கை கொடுத்தேன். ஆல் த பெஸ்ட்என்று அவரே சொன்னார். ஆளுநர் பார்த்த வேலையை இப்போது பிரதமர் மோடி தொடங்கி இருக்கிறார். பிரதமர் மோடி அவர்களே நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மீதும் - பா.ஜ.க. மீதும் இருக்கும் கோபத் தீ அடங்காமல் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாதவர் வாக்கு மட்டும் கேட்டு வருகிறாரே என்று, பா.ஜ.க.-வின் தோல்வியும் - துரோகமும் அப்போதுதான் மக்களுக்கு இன்னும் ஸ்ட்ராங்காகப் பதியும். மாநிலத்தைக் கெடுத்த அதிமுக மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பாஜக இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி வந்தடைந்தார் மு க ஸ்டாலின்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment