சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை வரும் 28-ந் தேதி துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் ரீதியாவும் நிர்வாக ரீதியாவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 26-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் சென்னை ஓமாந்தூரார் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
1 கோடியே 7 லட்சம் செலவில் அமைய உள்ள சிலையின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 16 உயரும் மற்றும் 12 அடி உயர பீடத்தில் வைக்கப்பட உள்ளது. சிலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறையினர் தீவரமாக மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 28-ந் தேதி சென்னை வரும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியின் திருவுருவச்சிலையை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என அனைவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலையை வெங்கையாநாயுடு திறக்க திமுகவினர் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒருவர், கலைஞர் வீதிக்கு எதிராக போராடிய பாஜகவின் வெங்கையா நாயுடு கலைஞர் சிலையினை திறப்பதை திராவிட இயக்கத்தின் நீட்சியாம் திமுக தலைவரும், தமிழ் நாட்டு அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மறு பரிசீலனை செய்திடுக விரட்டிடுவோம் கா(லி)வி களை என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் பலரும் இந்த ட்விட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil