திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வு காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பாக உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக கடல் சீற்றம் ஏற்பட்டு கடற்கரையில் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடல் அரிப்பு தொடரும் நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஐஐடி நிபுணர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/tiruchandur-sea.jpg)
அடுத்த கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கடலில் வெளியே தெரியும் பாறைகளையும் பார்த்த கனிமொழி எம்பி அமைச்சர்கள் இது குறித்தும் கேட்டறிந்தார். கோவில் முன்பாக உள்ள இந்த கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேசிய எம்.பி.கனிமொழி, விரைவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆண்டில் நடக்க உள்ளது. அதற்குள் இந்த கடல் அரிப்பிற்கு ஒரு நிரந்திர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஐஐடி நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறி அதற்கான நிதியை பெற்று அதற்கான தீர்வை முதல்வர் அறிவிப்பார். கடல் அரிப்பு தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது. கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பிரச்சனை இது.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/by7tOO4fb5SedXV0aWuT.jpg)
எல்லா இடங்களுக்கும் நிரந்தரமான தீர்வை எல்லா அரசாலும் உருவாக்க முடியாது. மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய இடங்களை பாதுகாக்க முதல்வர் நிச்சயமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசு போல் காலநிலை மாற்றத்தையும் அதனால் வரக்கூடிய மாற்றத்தையும் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய ஆட்சி வேறு எதுவும் இருக்க முடியாது கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் மீன்வளத்துறை அறநிலை துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“