எத்தனை அழுத்தங்கள், தடைகள் வந்தாலும்... தி.மு.க. போராடி வெல்லும்: கனிமொழி எம்.பி பேச்சு

எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்து நம்முடைய உரிமைகளுக்காகப் போராடக்கூடிய ஒரு இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என கனிமொழி கூறியுள்ளார்.

எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்து நம்முடைய உரிமைகளுக்காகப் போராடக்கூடிய ஒரு இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என கனிமொழி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kanimozhi MP Tirupur

திருப்பூரில் வக்ஃபு சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி.கனிமொழி, எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

Advertisment

திருப்பூர் ஷாஹீன் பாஃக் மைதானத்தில், ஒன்றிய பாஜக அரசின் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, ஷாஹின் பாஃக் போராட்டக் குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மூன்றாம் நாள் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி, ஏன் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் வாழ்த்துகள் சொல்கிறேன் என்று நீங்கள் சிந்திக்கக்கூடும்? எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்து நம்முடைய உரிமைகளுக்காகப் போராடக்கூடிய ஒரு இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்.  ஒன்றிய பாஜக அரசு நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்து விட வேண்டும் அதை மாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு ஆட்சி வந்த பிறகு, நம்முடைய நாட்டில் உள்ள சாமானிய மக்களின் நலனுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அதேபோல்,பாஜக கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாக்களும், மாநில உரிமைகளைத் தட்டிப் பறிக்கக் கூடிய செயலாக இருக்கிறது.

Advertisment
Advertisements

பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலமாக அந்த மாநில அரசினை தவிக்க வைக்க கூடிய ஒரு மோசமான நிலையில் உருவாக்கி வருகிறார்கள். நாங்கள் ஆளுநரை எதிர்க்கிறோம். ஆனால், ஆளுநரை மாற்றிவிடாதீர்கள். அவர் இருக்கும் வரை,  திமுகவுக்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் நல்ல பெயரைக் கொடுக்கும் என்று முதலமைச்சர் அடிக்கடி சொல்லுவார்.  மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக்கூடிய அத்தனை ஆளுநருக்கும், அவர்களை செயல்படுத்தத் தூண்டும் ஒன்றிய பாஜக அரசுக்கும், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாகக் குட்டு வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துகாட்டி, சாதனை படைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வஃக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பிக்களும் அதை எதிர்த்துப் போராடினோம். சிறுபான்மையினரைப் புறக்கணிக்க கூடிய வகையில், அவர்களை அச்சுறுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.அதே சமயத்தில், நாட்டில் உள்ள சாதாரண சாமானிய ஹிந்துக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு என்ன செய்து இருக்கிறது? பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக்களுக்காக பாஜக ஒன்றும் செய்ததில்லை.

இட ஒதுக்கீடுக்குப் போராடியது, கல்வி உரிமை, வேலைக்கான உரிமை பெற்றுத்தந்தது திராவிட இயக்கங்கள். இஸ்லாமிய மக்களும் இந்திய விடுதலைக்காகப் போராடினார்கள். பாஜக கொண்டாடக்கூடிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எல்லாம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள். வக்பு வாரிய மசோதாவை முன்மொழிய ஒரு இஸ்லாமிய எம்.பி கூட பாஜகவிடம் இல்லை. ஒரே ஒரு சிறுபான்மை அமைச்சர் கிரண் ரிஜிஜூயை வைத்து நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டு வருகிறார்கள்.

நமது நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது ஒன்றிய பாஜக அரசு. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் (article 26) இந்தியா மக்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடிய ஒரு சட்டம். வஃக்பு சீர்திருத்த சட்டத்தின் மூலம் வாரியத்தில் பெண்களைக் கொண்டு வருகிறோம் என்று பாஜக சொல்கிறது.  தமிழ்நாட்டில் வஃக்பு வாரியத்தின் தலைவராக ஒரு பெண் இருந்து இருக்கிறார். வஃக்பு வாரியத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு இடத்தைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். இஸ்லாமிய மதத்தை சாராத இரண்டு நபர்களை வஃக்பு வாரியத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

இந்து கோவில் நடத்தக்கூடிய கல்லூரியில், வேறு மதத்தை சார்ந்த பேராசிரியருக்கு வேலை கொடுக்க எதிர்த்துப் போராடியவர்கள் பாஜக. வஃக்பு வாரியத்தில் பிற மதத்தை சாராத இரண்டு நபர்களை சேர்த்தால், எப்படி நியாயமாகும் என்று திமுகவும், நாமும் கேட்கிறோம். எனக்கு மத நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மத நம்பிக்கை உள்ளவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கை பற்றி விவாதிக்கலாம் ஆனால் மத நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை எதிர்த்து சட்டங்களை இயற்றக்கூடிய உரிமை எந்த ஒரு அரசுக்கும் கிடையாது. இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது.

வஃக்பு வாரியத்தில் உள்ள சட்டங்களை சிதைத்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கக் கூடிய வகையில் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. மும்பையில் அம்பானியின் இல்லம் வஃக்புக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாக ஒரு வழக்கு இருக்கிறது. பன்னிரண்டு வருடம் அந்த இடத்தில் வாழ்த்து விட்டால், அந்த இடம் அவருக்கு சொந்தம் என்று புதிய வஃக்பு திருத்தச் சட்டம் சொல்கிறது. அம்பானி இந்த நாட்டின் மிகப் பெரிய ஏழை, அவர் போகிறதுக்கு வேறு இடம் இல்லை. அந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படுகிறது.

ஒவ்வொரு இஸ்லாமியர்களும் சம்பாதித்த பணத்தில், லாபத்தில் ஒரு பகுதியைத் தானமாகத் தரும்போது, நிச்சியமாக வஃக்பு சொத்து அதிகரிக்கத்தான் செய்யும். இஸ்லாமியர்களுக்குத் தான் இந்த நாடு சொந்தமாகப் போகிறது என்ற பொய்யை பாஜக பரப்பாகிறது. இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் மக்கள், பாஜகவை விட அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமைகள் அதிகமாக இருக்கிறது.  தென் இந்தியாவில் தான், கோவில்களின் சொத்துக்களை அரசாங்கம் நிர்வாகம் செய்கிறது. இங்கே கோவில்களைக் காட்டியது, சொத்துக்களை அதிகமாக எழுதி வைத்தது அரசர்களாக ஆண்ட மன்னர்கள். மக்களின் வரிப் பணத்தில் தான் கோவில்களைக் கட்டினார்கள், அப்போது அரசாங்கம் என்பது அரசர்கள். இப்போது, அரசாங்கம் என்பது ஆட்சியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை. இதனால் தான், கோவில்களை நிர்வகிக்க உரிமை பெற்றுள்ளோம். ஆனால், வட இந்தியாவில் கோவில்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

வஃக்பு சட்டம் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களைப் பறிப்பதிற்கும், பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கும் இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்படுகிறது. அதனை திமுக என்றும் எதிர்க்கும். எனவே தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வஃக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது நிராகரிக்கும் என்று கூறினார். இந்தியத் திருநாடு காப்பாற்றப்பட வேண்டும், இந்திய நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஒன்றிய பாஜக அரசு முடிவுக்கு வரவேண்டும்.

காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு பறித்தனர். காஷ்மீரில் சுற்றுலா சென்ற நாட்டு மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத அரசாக ஒன்றிய பாஜக இருக்கிறது. காஷ்மீரில் இழந்த உயிர்களைப் பற்றி பாஜக பேசவில்லை. அதிலும், அரசியல் செய்யும் மலிவான நிலைமை தான் நாம் பார்க்கிறோம். நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், அம்பானி, அதானி தொழில் வளர்ச்சி பெறுவதற்கான அரசை ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது. பெரும்பான்மை மக்கள் மீதோ, பெண்கள் மீதோ, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதோ எந்த கவலையும் இல்லை.

கடந்த நிதிநிலைக்குப் பிறகு, 77% சதவீதம் ஓபிசிகளுக்கு அளித்து வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய மக்களின் குழந்தைகளுடைய கல்வி உதவித் தொகையை நிறுத்திய அரசு தான் ஒன்றிய பாஜக அரசு. இந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, எதிர்கால தலைமுறைக்கு எதிராக, இறையாண்மைக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக, நாட்டின் மொழிகளுக்கு எதிராக, மாநிலங்களுக்கு எதிராக, நாட்டின் மக்களுக்கு எதிராக, நாட்டின்  உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவோம் என கூறியுள்ளார்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ந.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராசன்,  திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் செ.உமாமகேஸ்வரி, திமுக கழக மகளிர் தொண்டரணி துணை செயலாளர்கள் நா.மாலதி நாகராஜ், திமுக  நிர்வாகிகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Mp Kanimozhi Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: