/tamil-ie/media/media_files/uploads/2023/07/KN-Nehru.jpg)
திருச்சி திமுக பயிற்சி பாசறை
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இந்த தேர்தலை கடும் சவால்களுடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. இதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார்.
அதன் முன்னோட்டமாக இன்று திமுக நிர்வாகிகளுடன் திருச்சியில் கலந்துரையாடலுக்கு வந்த முதல்வர் 2 நாள் தங்கியிருந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் திமுக. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி, இந்த கூட்டம் திருச்சியில் முதன் முறையாக நடத்தப்பட்டது. டெல்டா மண்டலத்துக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மத்திய தஞ்சை தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் என சுமார் 15 ஆயிரம் திமுகவினர் இந்த பயிற்சி பாசறைக்கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் வந்த திமுகவினர் என திருச்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கலந்துக்கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-160.png)
இந்தக் கூட்டத்தை மாநாடு போல் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தொண்டர்களுக்கு மதிய விருந்தாக மட்டன் பிரியாணி போட்டு தடபுடலாக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 30 ஆயிரம் பேருக்கு மதிய உணவு அமர்க்களப்பட்டது. டெல்டா வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேருக்கு, 5 ஆயிரம் கிலோ அரிசி, 6, ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சி, 4 ஆயிரம் கிலோ கோழி இறைச்சி என கொண்டு வந்து கமகம பிரியாணியும், சிக்கன் 65 வறுவலையும், முட்டை மற்றும் தயிர் சாதம் என பிரம்மாண்டமான பந்தலில் அறுசுவை சாப்பாடு போட்டு அசத்தினார் அமைச்சர் கே.என்.நேரு.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.