/indian-express-tamil/media/media_files/2025/06/12/HyOsUN7FXMBAFiHlay1Y.jpg)
தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில், கடந்த சில மாதங்களாக தந்தை – மகன் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சி தலைமை பொறுப்பில் இருக்க எனக்கு உரிமை இல்லையா என்று, டாக்டர் ராமதாஸ் உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் பா.ம.க.வில் கடந்த சில மாதங்களாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மோதல், அதிகரித்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், ராமதாஸ் ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதும், அவரை அன்புமணி பதவியில் நியமிப்பது பா.ம.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
அதேபோல் தனது மகன் அன்புமணி குறித்து, பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ராமதாஸ், அன்புமணி தனது அம்மாவை தண்ணீர் பாட்லால் தாக்கினார் என்று கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதாமாக சமீபத்தில் நடந்த பா.ம.க மாநாட்டில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அன்புமணி பதிலடி கொடுத்திருந்தார். இவர்களுக்கு இடையே நடந்து வரும் மோதல் சமாதானம் ஆக வேண்டும் என்று கூறி தஞ்சையில் பா.ம.க. சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்ட பலரும் ராமதாஸ் – அன்புமணி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு பா.ம.க.வினர் மத்தியில் எழுந்துள்ள நிலையில், விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், நான் இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்க எனக்கு உரிமை இல்லையா என்று உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், எனக்கும் செயல் தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை உங்களுக்கு யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துகாரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். என்னை தைலாபுரம் வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடிக்கொண்டு இருக்குமாறு சொல்கின்றனர்.
தலைவர் பதவியை தான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி நம்பவில்லை. அதன் பின்பு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது. நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன். 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா? என்னை சந்திக்க கூடாது என ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். என்னை சந்திக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அன்புமணி கூறினார்.
ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பா.ம.க என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே என்னை வெளியே தள்ளிவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன். தந்தைக்கு பிறகே தனயன், அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம்.
குலசாமி என்று கூறிக்கொண்டே நெஞ்சில் என்னை குத்துகின்றனர். எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே என்னை அதல பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். அய்யாவின் புகழ், பெருமையை பேசுவதே எங்கள் நோக்கம் என்று சொல்லிக்கொண்டே என்னை சிறுமைப்படுத்துகின்றனர். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனப்படுத்தி, என் உருவப்படத்தை மட்டும் உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செல்கின்றனர் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.