அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. ரூ.4,800 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.
இதுகுறித்து அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை டவடிக்கை எடுக்காததால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது.
விசாரணை முடிவில் 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை கடந்த ஜூலை 18-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.11) மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“