திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக கடந்த 9-ம் தேதி சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அந்த நேரத்தில் சிறுமி ஒருவர் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் முதல்வர் அங்கிள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று சத்தமாக கத்தினார். இதனை உடனே கவனித்த முதல்வர், உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது கோரிக்கையினை விசாரித்து உதவிட கூறினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மனுவை பெற்று கடந்த 10-ம் தேதியே உடனடி விசாரணை மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர், நீளிகோணம்பாளையம், என்கேஜி நகர் என்ற முகவரியை சேர்ந்த முத்துகுமார் மனைவி கவிதா என்பவர், தனது கணவர் கடந்த 24.03.2022 அன்று அவரது சொந்த ஊரான மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தில் இறந்துவிட்டார். அவரது சொத்துக்கள் கூட்டுரிமையாக உள்ளதால் அதனை விற்பனை செய்ய தனது மாமியார் இடையூறு செய்கிறார். எனது 2 பிள்ளைகளும் கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் படித்து வருவதால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையும், இருக்க வீடு இல்லாத நிலையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் முழுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவரின் தன்விருப்ப நிதியிலிருந்து செலுத்துவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும், மனுதாரருக்கு தகுதியின் அடிப்படையில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறைகளின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல்வர் திருச்சி வருகையின்போது அங்கிள் என்னை படிக்க வைப்பீங்களா எனக்கேட்ட பெண் பிள்ளையின் தாயார் கவிதாவிடம் குழந்தையின் கல்வி கட்டணத்திற்காக ரூ.61 ஆயிரத்திற்கான காசோலையினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“