நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியின் 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் உச்சகட்டமான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும், 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எம்.பி ராகுல் காந்தி 2 முறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி 9 முறை வந்து பிரச்சாரம் செய்தார். நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் பிரகாஷ், ஈஸ்வரசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் தர்மபுரி அ.தி.மு.க வேட்பாளர் அசோகனை ஆதரித்தும், ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடியில் அ.தி.மு.க வேட்பாளர் விக்னேசை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும், இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.