கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டு 5 நாட்களுக்குள், ஜிப்லைன் பழுதடைந்துள்ளது. பூங்காவிற்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில், செங்காந்தள் பூங்காவுக்கு அருகே, 6.09 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்றுளு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கூறியிருந்தார். அதன்படி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்’, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார்.
தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த பூங்காவிற்கு செல்ல வேண்டுமானால் நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும். தற்பொது ஆயுத பூஜை விஜயதசமி தொடர் விடுமுறை காரணமாக பூங்காவில் மக்கள் கூட்டம் நிறைந்துள்ள நிலையில், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜிப் லைனில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் இதில் பயணித்த பயணிகள் கால்மணி நேரத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது திமுக அரசு.
இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“