/tamil-ie/media/media_files/uploads/2023/02/Eps-Aid.jpg)
Tamil news updates
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியின் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஈவெரா திருமகன் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கடந்த இரண்டு வார காலமாக தமிழக அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆளுகட்சி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், மறைந்த ஈவெரா திருமகன் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சியான பாஜகவுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தது.
அதே சமயம் தற்போது ஒ.பி.எஸ், இ.பி.எஸ் என அதிமுக 2 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இ.பி.எஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஒ.பி.எஸ் தரப்பு அறிவித்தது. இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்ட நிலையில், பாஜக இந்த தேர்தலில் போட்டியிடுகிறதா என்ற கேள்வியும் இருந்தது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2001 மற்றும் 2016-ம் ஆண்டு என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள கே.எஸ்.தென்னரசு தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதிமுக இபிஎஸ் தரப்பு தற்போது தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளரை பாஜக ஆதரிக்குமா? ஒபிஎஸ் தரப்பு அடுத்து என்ன செய்யப்போகிறது? கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.