காங்கிரஸ் மூத்த தலைவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் திராவிடர் கழகத்தை தொடங்கி ஆலய போராட்டம் நடத்தி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர் தந்தை பெரியார். இவரின் சகோதரர் கிருஷ்ணசாமி. அரசியலில் ஈடுபட்ட இவர், தனது மகன் ஈ.வி.கே.சம்பத்தையும் அரசியலில் இழுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் தி.மு.க கட்சியில் இருந்து பிரிந்த ஈ.வி.கே.சம்பத், தமிழரசு கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைதொடங்கினார். இதில் கவியரசர் கண்ணதாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருந்தனர்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ஈ.வி.கே.சம்பத், தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்த்திக்கொண்ட நிலையில், 1977-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார். தந்தையை போலவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் இவருக்கு கட்சியில், எம்.எல்.ஏ சீட் கொடுக்க பெரிய சிபாரிசு செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அதன்படி 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோவன், 2001-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாறினார். அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் பிரபலங்களை சந்தித்து வந்த இளங்கோவனுக்கு உறுதுணையாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே.சம்பத் மீது பெரிய மரியாதை வைத்திருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அவரின் நினைவாக தனது மகளுக்கு சம்பத்தம்மா என்ற பெயர் வைத்துள்ளார்.
மேலும் சம்பத் மீதுள்ள மரியாதையின் காரணமாக அவரது மகன் இளங்கோவனை கட்சியில் வளர்த்துவிட பெரிய உதவியாக இருந்துள்ளார். இதன் மூலம் அரசியலில், முக்கிய பிரபலமாக மாறியவர் இளங்கோவன். ஒருமறை தமிழகத்திற்கு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த சோனியாக காந்தியிடம் அப்போதைய காற்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திண்டிவனம் ராமூர்த்தி, பெரியார் பற்றியும் அவர் செய்த போராட்டங்கள் பற்றியும் எடுத்து கூறி, இவர் தான் பெரியாரின் பேரன் என்றும் கூறியுள்ளார். அன்றில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இளங்கோவன் பெரிய ஆளுமையாக வளர்ந்துள்ளார்.
அன்று தொடங்கிய இந்த ஆளுமை அவர் இறக்கும் வரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் மற்றும் சோனியாக காந்தி இருவரிடமும் நெருக்கமாக இருந்துள்ளார். தனது உடல்நலத்தில் அக்கறை இல்லாத இளங்கோவன் எப்போதும் கட்சி பணிகளுக்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளார். ஆனாலும் அசைவ உணவு பிரியரான இவர், கட்டுப்பாடு இல்லாமல், தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவார். அதேதான் சாப்பிடும உணவையே மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று விரும்புவர்.
இவரது மகன் திருமகன் ஈவேராவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் பணி மேற்கொண்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அதன்பிறகு அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு சஞ்சய் சம்பத் என்ற இன்னொரு மகனும் உள்ளார்.
தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.