தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் இன்று வைகை அணை பகுதியை நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:
வைகை அணை மதுரை உட்பட ஆறு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் 20 அடிக்கு மேல் மண் மேடிட்டு உள்ளதால் நீர் கொள்ளளவை இழந்துள்ளது. வைகை அணைக்கு மேலே ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/c6a1db7e-5dc.jpg)
தற்போதைய நிலையில் வைகை அணையில் இருக்கும் தண்ணீரை இன்றைய தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க விவசாயிகள் கருத்தறிந்து உரிய அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும். 75 பணியாளர்கள் 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாகவே செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அணையில் உள்ள பூங்கா பகுதி புதர் மண்டி கிடக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் பராமரிப்பு இன்றி உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/0fdab210-589.jpg)
தேனி நகரத்தை ஒட்டிய பகுதியில் இருக்கிற மிகப்பெரும் சுற்றுலா தளமான வைகை அணை பகுதி மக்கள் பார்வையிட செல்ல முடியாத நிலையில் பாதுகாப்பற்று கிடைக்கிறது. அணைப்பகுதியில் உள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பழுதடைந்து கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக அணை பராமரிப்பின்றியும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு உயர் மட்ட குழுவை அனுப்பி அணையை ஆய்வு செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/59a00e14-b3e.jpg)
அணை சுவரின் வெளிப்பக்கம் முழுமையும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் அணையின் சுற்று சுவருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கணக்கில் கொண்டு உரிய பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்