தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்கள் பற்றாக்குறையால் பே6000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பணி நேரம் கணக்கு பார்க்காமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதலான பணிச்சுமையை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை கொடுக்க அரசு மறுத்து வருகிறது. ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் கூட ஊதிய உயர்வை வழங்கவில்லை. அவர்களிடம் பிடித்தம் செய்து வழங்குவதாக ஒப்புக்கொண்ட தொகை கூட வழங்க மறுத்து, உழைக்கும் தொழிலாளர்களை பழிவாங்க துடிப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும். இவர்களது வேதனைகளை கேட்டு பொதுமக்கள் கண்ணீர் சிந்தும் நிலை உள்ளது.
நிதிச் சுமையை காரணம் காட்டி போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்குவது எந்த வகையில் நியாயம் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உணர வேண்டும். தனது பாதுகாப்பிற்கு நிதி சுமை இருந்தாலும் முன்னுரிமை கொடுத்து பல்வேறு நவீன பாதுகாப்பு கருவிகளுடனான வானகங்கள் வாங்க முடிகிறது. ஆனால் பழுதடைந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேரூந்துகள் வாங்குவதற்கு நிதி சுமையை காரணம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் 6000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியாளர் நியமனம் செய்யப்படாமல் பொதுமக்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்? சென்னை மாநகரத்தில் செண்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இரவு எட்டு மணிக்கு மேலாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கு கூட பேருந்து பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் இருந்து தலைநகரங்களுக்கு வருகிற மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். நகரப்புறங்களுக்கு அன்றாட மக்கள் வந்து செல்வதற்கு பேருந்துகள்
ஏற்கனவே சென்று வந்த பல பேருந்துகள் குறைக்கப்பட்டதால் கிராம மக்கள் நகரங்களோடு துண்டிக்கப்பட்டுள்ளார்கள். கடன் பெற்றாவது தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி மறைமுகமாக நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று தமிழ்நாடு அரசு எண்ணுவது அரசுக்குத்தான் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்.
தொழிலாளர்களின் நலனை அக்கறையோடு முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுக்கு அவசரகால நிதி உதவி செய்து அவர்களும் மற்ற அரசு ஊழியர்கள் போல பாதுகாக்க முன்வர வேண்டும். பேருந்துகள் பராமரிப்பின்றி பல்வேறு பழுதுகள் இருந்தாலும் மக்கள் நலன் கருதி உயிரை பணயம் வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அன்றாடம் பணியாற்றி வருகிறார்கள். இரவு பகல் பாராது 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து வருகிற அவர்களுக்கு மற்ற துறைகளை விட முன்னுரிமை அடிப்படையில் சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு கவனத்தின் அடிப்படையில் செய்திட வேண்டும்.
முதலமைச்சர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதற்கு பதிலாக தொழிலாளர்களிடம் ஒற்றுமையை பிளவுபடுத்தி தனது பழி தீர்க்கும் வஞ்சக நடவடிக்கையை தீர்த்துக் கொள்ள நினைப்பது மனிதநேயமற்ற செயல். எனவே உடனடியாக அவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறோம். போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்துகிற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முழு ஆதரவளிக்கிறது என பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil