பிப்ரவரி 13 டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் ரத்து செய்ய வலியுறுத்தும் கோரிக்கையும் இடம்பெறும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் SKM (NP) தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டின் சார்பில் SKM (NP)தலைவர் அய்யாக்கண்ணு, கன்வீனர் பிஆர்.பாண்டியன் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஹரியான டல்லேவாலா,மபி சிவக்குமார்கக்கா ஜி தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா சாந்தகுமார்,கேரளா பிஜி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பிப்ரவரி 13 டெல்லியில் துவங்க உள்ள போராட்டத்தில் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள், மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் நடத்திய டெல்லி போராட்டத்தில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் இதுவரையில் நிறைவேற்றாத நிலையில் பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை துவக்க உள்ளோம். இப்போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விரோத சட்டத்தை விட பல மடங்கு மோசமான சட்டமாகும். இச்சட்டம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டிற்கு வந்திருப்பதால் நீர்நிலைகள் ஆறுகளை ஏற்கனவே அபகரித்தவர்கள் அதனை சட்டபூர்வமாக உறுதி செய்து கொள்ள வழிவகுத்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவங்க விளை நிலங்களையும், ஏரிகள்,குளம் குட்டை, ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளைதன் விருப்பத்திற்கு கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்தி கொள்வதற்கு இச்சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு நடத்திய தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 6.40 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளதே! இச்சட்டத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இச்சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்தியா முழுமையிலும் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது. எனவே, இதை முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டுமானால் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டும். எனவே, பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் டெல்லி போராட்டத்தில் இதனை கோரிக்கையாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
போராட்டக் குழு இச்சட்டத்தின் பாதிப்புகளை உணர்ந்து டெல்லி போராட்ட கோரிக்கையில் இணைத்து அதனை வலியுறுத்துவோம் என அறிவித்துள்ளனர். இதனை அடுத்து வரும் 20ம் தேதி எஸ் கே எம் (NP)அமைப்பின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.