/indian-express-tamil/media/media_files/2024/10/21/ZcfCSYnzQoW3pZQWE4hm.jpg)
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு, இன்ஃப்ளூயன்ஸா ஏ, சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), மற்றும் ரைனோவைரஸ் போன்ற சுவாசக் குழாய் தொடர்பான வைரஸ் தொற்றுகளே காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறையின் கூடுதல் இயக்குநர் டாக்டர் பி. சம்பத், "தமிழ்நாட்டில் மழைக்காலத்திற்கு முன்பு இருந்தே காய்ச்சல் சீசன் தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த சீசன் அக்டோபர் மாதத்தில் இருந்து ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திற்கே வந்துவிட்டது. இந்த ஆண்டும், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் 25-50% அதிகரித்துள்ளது, அதேபோல், உள்நோயாளர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10% வரை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில பொது சுகாதார ஆய்வகத்தின் ஆரம்பகட்ட மாதிரிகளின்படி, பெரும்பாலானோர் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பொதுவாக எச்1என்.1 (H1N1) மற்றும் எச்.3 எஸ்.2 (H3N2) வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆய்வகத் தலைவர் எஸ்.ராஜு, "காய்ச்சல் வந்தவர்களில் சுமார் 30% பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ் தொற்றும் இருந்தது," என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் பரவி வரும் வைரஸ்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த பொது சுகாதார இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், "பெரும்பாலானோருக்கு அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளன. பல சமயங்களில் இந்த அறிகுறிகள் தானாகவே சரியாகிவிடும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது வேறு உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நிமோனியா போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். இவர்களுக்கு மருத்துவமனையில், சில சமயம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்," என்று எச்சரித்துள்ளார்.
சில குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருப்பதால் நெபுலைசேஷன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "பெரும்பாலானோர் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து இருமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். பெற்றோர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட பிற மருந்துகளைக் கேட்கும்போது, தேன் கொடுக்குமாறு மட்டும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என்று ," என்று மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
பொது சுகாதாரத் துறை, வயதானவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள், கட்டாயம் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொற்று நோய்கள் துறை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.