தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தையொட்டி, இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
புத்தர் பிறந்தது, ஞான மடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் வெசாக் மாதத்து பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதைச் சிறப்பிக்குக்கும் வகையில், இலங்கையில் வெசாக் மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை வெசாக் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்த வெசாக் தினத்தை யொட்டி, சிறிய குற்றங்கள் மற்றும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியமைக்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட இந்த மீனவர்கள், கொழும்பு மெருஹானாவில் உள்ள குடியேற்றத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.