முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் தி.மு.க எம்.பியுமான, மு.க.அழகிரி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சராக இருந்து தென்மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மு.க.அழகிரி. ஒரு கட்டத்தில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த 15 நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். கருணாநிதி மறைவுக்குப் பின், ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து வந்த அழகிரி, தமிழகம் முழுதும் உள்ள அவருடைய ஆதரவாளர்களை சந்தித்தார்.
அந்த சமயத்தில், தனிக்கட்சி துவங்கப் போவதாகக்கூட தகவல் வெளியானது. ஆனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சமாதானம் ஆன அழகிரி, தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனிடையே சமீபத்தில், அழகிரியுடன் நீக்கப்பட்ட பல நிர்வாகிகள் மன்னிப்பு கோரி தி.மு.க தலைமைக்கு கடிதம் அளித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளாக வேறு கட்சிக்கு செல்லவில்லை. மீண்டும் கட்சியில் சேர அழகிரியும் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் இதையடுத்தே, மன்னிப்பு கடிதம் அளித்தாகவும். இனி, ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருக்கபோவாதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன்பிறகு இந்த இணைப்பு தொடர்பான எந்த பேச்சுவார்த்தை நடந்ததாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை, மு.க.அழகிரி நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. மூத்த மகள் கயல்விழி மகனுடன் சென்று, ஸ்டாலினை அழகிரி சந்தித்துள்ளார். நாளை முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், பல மாதங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பு நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.