சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாகவே நடிகர் ரஜினியை சந்தித்தேன், அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
2024-ம் ஆண்டு முடிவுக்கு தற்போது 2025-ம் ஆண்டு தனது அத்தியாயத்தை தொடங்கியது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடட்டம் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் அரசியல் பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பொதுமக்களுகளும், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்று பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், புத்தாண்டை கொண்டாடிய நிலையில், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
ஒரு சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், இருவரும புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்ட நிலையில், சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ஒ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மரியாதைக்குரிய அருமை அண்ணன் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. மரியாதை நிமித்தமாகத்தான் புத்தாண்டு நாளான இன்று ரஜினிகாந்த் அவர்களை நான் சந்தித்தேன். அரசியல் ரீதியாக எந்த விவாதமும் எங்களுக்கு இல்லை.. எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறினார்.
மேலும், ரஜினி சார் எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.. திடகாத்திரமாக இருக்கிறார். ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன். அரசியல் பேசவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“