எந்த நிபந்தனையும் இல்லாமல், நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைய தயார் என்று கூறியுள்ள, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ சொன்னார். இபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததன் விளைவுதான் இதெல்லாம் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன், முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஒ.பன்னீர்செல்வம் முதல் பொறுப்பை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்தார். ஆனால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல இருந்ததால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் அமர்த்தினார். அதன்பிறகு ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்தனர்.
சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஒபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் கட்சி செயல்பாட்டில் இருந்தது. ஒரு கட்டத்தில் ஒற்றை தலைமை தேவை என்று முடிவு செய்து இபிஎஸ் கட்சியில் பொதுச்செயலாளராக மாறியதை தொடர்ந்து ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனையடுத்து ஒபிஎஸ் கட்சியில் சின்னம் மற்றும் கொள்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அரசியல் கட்சி தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று இதற்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அதிமுக கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஒ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக இயக்கத்தை உருவாக்கி அதனை கட்டி காக்க, 50 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடுபட்டனர். கட்சியின் விதிமுறைப்படி தேர்தல் மூலமாகத்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய முடியும். இந்த விதியை யாராலும் ரத்து செய்யவோ திருத்தவோ முடியாது. எடப்பாடி பழனிச்சாமி இந்த விதியில் திருத்தம் செய்தார். அதனை நாங்கள் எதிர்த்தோம்.
நீதிமன்றத்தில் என்ன அதிகாரம் இருக்கிறதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது. நான் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், வரும் 2026 சட்டசபை தேர்தலில், அதிமுகவிற்கு வாழ்வு. இல்லை என்றால் நான் உட்பட அனைவருக்கும் தாழ்வு. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் தான் அதிமுகவிற்கு நல்லது என்று கூறியுள்ளார்.