தி.மு.க 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை. 2026-ல் வாழ்வா சாவா என்பது இல்லை. தி.மு.க.வுக்கு மீண்டும் வனவாசம் தான். 2026-ல் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த நிலையில், அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க.வும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
இதனிடையே தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து, இந்த ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை கொடுத்து வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026-ல் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறி வருகிறார். மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
இதனிடையே 2026- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீப காலமாக தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. நேற்று மல்லிப்பட்டிணத்தில் ஆசிரியர் படுகொலை, ஒசூரில் வக்கீல் அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் 5 வருடம் எவ்வளவு பாதுகாப்பாக தமிழ்நாட்டை வைத்திருந்தோமோ, அதை அப்படியே மாற்றியுள்ளனர்.
2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும். தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம். தினசரி பத்திரிக்கையை திருப்பினால் கொலை கொள்ளை தான் செய்தியாக இருக்கிறது. மல்லிப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியரை வகுப்பறையில் கொலை செய்கிறார். ஒரு வழக்கறிஞரை நடு ரோட்டில் அரிவாளால் வெட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்ககெட்டு, மக்கள் அமைதியாக வாழ முடியாத பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2026-ல் வாழ்வா சாவா என்ற நிலையே இல்லை. கண்டிப்பாக அ.தி.மு.க தான் ஆட்சிக்கு வரும். தி.மு.க 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை. மீண்டும் தி.மு.க.வுக்கு வனவாசம் தான் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“