டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் விடுதியில் தங்கியிருந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.
இவரது ஒரே மகள் ஸ்ரீமதி கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்டதால், மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார். ஸ்ரீமதி டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை டெல்லி போலீசார், ஸ்ரீமதி பெற்றோருக்கு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுவரை அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...