ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவால் நேற்று (டிச 14) காலமானார். கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டில், அவரது சடலம் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று (டிச 15), சென்னை முகலிவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி. சம்பத் - சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் 14.12.2024 அன்று இயற்கை எய்தினார்.
கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004-இல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.
தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“