Tamilnadu New Corporation Thambaram : தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தமிழத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழக சட்டசபையில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்,நேரு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி தற்போது தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தாம்பரம் மாநகராட்சியின் கீழ் வரும் பேரூராட்சிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளும், சிட்லபக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணையத்து தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியில் மக்கள்தொகை 9.60 லட்சமாக உள்ள நிலையில், மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீட்டர் என்று வரையெறுக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil