தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர் மற்றும் அவர்களுடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் ஒதுக்கப்படும் இந்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது. இதனால் புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம் என இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு நீதிமன்றம் தடையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தனது தீர்ப்பில், “தமிழக மாணவர்கள் இந்தாண்டு அண்டை மாநிலங்களில் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டும். அதுமட்டுமின்றி, இனிமேல் தமிழக மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், சிஇஎஸ்இ தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர் மற்றும் அவர்களுடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், "நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் உடல் செல்வோர் ஒருவருக்கு இலவச பேருந்து, ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் தலாய் ரூ.1000 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட இதுகுறித்து மாணவர்களுக்கு சந்தேகம் இருப்பின் 14417 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும்; வரும் 6 ம் தேதி வரை இந்த கூடுதல் பேருந்து சேவை தொடரும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும்; வரும் 6 ம் தேதி வரை இந்த கூடுதல் பேருந்து சேவை தொடரும் - அரசு விரைவு போக்குவரத்து கழகம் #NEET
— K.A Sengottaiyan (@KASengottaiyan) May 4, 2018
தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.