/tamil-ie/media/media_files/uploads/2018/01/busfare_650x400_51516449777.jpg)
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை பேருந்து கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டண குறைப்பின் மூலம், சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச, அதிகபட்சக் கட்டணம் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணம் ரூ.18 ஆக இருக்கும். நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இல் இருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கட்டண குறைப்பு மூலம் நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என தமிழக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாளை சிறை நிரப்பும் போராட்டத்தையும் திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில், பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.