தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 2 லட்சத்திற்கு அதிமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மே 10-ந் தேதி முதல் வரும் மே 24-தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளதால், இன்று முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி அளித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 17-ந் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் செல்லும் வாகனங்களுக்கு இ.-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் போதுமான தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், அந்த திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த தடுப்பூசி பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை கோரியுள்ளது.
இதில் 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil