ராஜீவ் கொலைக் கைதி நளினியின் பரோல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் உள்ளார். லண்டனில் உள்ள 25 வயதாகும் தன் மகள் அரித்ராவின் திருமண ஏற்பாடுகளை உறவினரோடு கலந்தாலோசித்து செய்ய 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது.
அந்த மனுவில், ‘லண்டனில் வசிப்பதாக கூறும் நளினியின் மகளின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றின் நகலை ஆதாரமாக சமர்பிக்கவில்லை. பரோல் கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான முடிவை அவரின் நன்னடத்தையை வைத்து சிறைத்துறை கடிதம் அளிக்கும். ஆனால் அதுபோல எந்த பரிந்துரை கடிதமும் சிறைத்துறை வழங்கவில்லை.
மேலும் அவர் செய்த குற்றம் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றமாகும். எனவே நளினிக்கு பரோல் வழங்கினால் அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் பரோல் விஷயத்தில் இணக்கமாக நடந்துகொண்ட தமிழக அரசு, நளினி விஷயத்தில் கடுமையான நிலைப்பாடு எடுத்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.