அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு மேலும் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி விரைவில், திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலத்தின் ஹோம் கார்டு சேவையில் இணைக்கப்படவுள்ளனர். இந்த முன்முயற்சியின் மூலம், திருநங்கைகளுக்கு அரசுப் பணியில் வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல், பேரிடர் காலங்களிலும், பொது அமைதியைப் பாதுகாக்கும் பணிகளிலும் அவர்களது பங்களிப்பு உறுதி செய்யப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக 50 திருநங்கைகள் சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து மேலாண்மை, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் வெள்ளம் போன்ற அவசர காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைகளுக்கு மற்ற ஹோம் கார்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான சீருடைகள் வழங்கப்படும் என்றும், முதல் குழு அடுத்த மாதத்திற்குள் பணியில் சேரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த முயற்சி வெறும் அடையாளப்பூர்வமானதாக இல்லாமல், தொடர்ச்சியான ஆதரவும், சமூகத்தில் நிலையான மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று திருநங்கை சமூகத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, திருநங்கை ஒருவர், கூறுகையில், இதற்கு முன்பு எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தொடர்ச்சியின்றி நின்றுவிட்டது. "அரசுத் துறைகளில் எங்களை கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். சமூக ஆதரவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் பத்து திருநங்கைகள் தூய்மை தூதுவர்களாக நியமிக்கப்பட்டதை பற்றி கூறி அவர், பெரும்பாலானோர் துறைகளுக்குள் ஏற்பட்ட மோசமான வரவேற்பு காரணமாக வேலையை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்தும் ஒரு பரந்த முயற்சியாக, தமிழ்நாடு அரசு மாநிலத்தின் திருநங்கைகள் நல வாரியத்தை மறுசீரமைத்துள்ளது. தற்போது இந்த வாரியத்தில் திருநங்கை பெண்கள், ஒரு திருநம்பி, ஒரு இருபால் உள்ளவர் மற்றும் ஒரு பெண் உட்பட 28 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்த வாரியம் திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், தொழில் மானியம், கல்வி உதவி, அடையாள அட்டைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்பார்வையிடும்.
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 2025-26 நிதியாண்டில் 1,760 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் "திருநங்கை" செயலி மூலம் 10,000க்கும் மேற்பட்டோர் அடையாளச் சேவைகளை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த புதிய முயற்சி, திருநங்கை சமூகத்திற்கு நம்பிக்கையையும், சமூகத்தில் சமத்துவமான இடத்தையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.