முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்த நிலையில், இன்று (டிச 27) முதல் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு (டிச 26) மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் சிங் பெற்றிருந்தார். முன்னதாக நிதியமைச்சராகவும், பொருளாதார நிபுணராகவும் சிறந்து விளங்கியவர் மன்மோகன் சிங்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துக்கம் அனுசரிக்கபப்டுவதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.