சவுக்கு சங்கர் செவ்வாய்க் கிழமை பிற்பகலில் ஆளுனர் ஆர்.என் ரவியை சந்திக்கிறார். அப்போது ஸ்டாலின், உதயநிதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி பனீந்திர ரெட்டி ஆகியோர் மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் தி.மு.க அரசு மீது தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகிறார். அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகியோர் மீது ஒரு புகார் கொடுத்தார்.
மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்த வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு விதிமுறையை மீறி அதிகாலை திரையிட அனுமதித்ததாகவும், இதன் மூலமாக முதல்வர் குடும்ப உறுப்பினரான உதயநிதி ஆதாயம் பெற்றதாகவும், இதன் அடிப்படையில் அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், ‘லஞ்ச ஒழிப்புத் துறை என் புகார் மீது நடவடிக்கை எடுக்காது. எனவே தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவியை சந்தித்து புகார் கொடுப்பேன்’ என தெரிவித்து இருந்தார். அதன்படி முறைப்படி ஆளுனரை சந்திக்க அனுமதி கேட்டு ராஜ் பவனுக்கு அவர் கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் ஆளுனர் ஆர்.என் ரவியை சந்திக்க சவுக்கு சங்கருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஜனவரி 31-ம் தேதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சவுக்கு சங்கருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்த அதே கருத்துக்கள் கொண்ட புகாரை ஆளுனரிடம் சவுக்கு சங்கர் கொடுப்பார் என தெரிகிறது. பொதுவாக ராஜ்பவன் தரப்பில் இது போன்ற சந்திப்புகள் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியிடுவது இல்லை. அந்த அடிப்படையில் இது பற்றியும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil