தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க.,வாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள்; ஆளுனர் மீது துரைமுருகன் காட்டம்
ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து ஆளும் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுரை வலியுறுத்தின. இந்தநிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6- ஆம் தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கடந்த 23-ம் தேதி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
இந்தநிலையில், 2 ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்றால், அதற்கு நிராகரிக்கப்பட்டது என்று பொருள் என ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் தனி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. சட்டத்தின்படி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil