தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின் தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து தனது குடும்பத்துடன் ஆன்மீக பயணத்தை தொடங்கி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை சாலை மார்க்கமாக இராமேஸ்வரம் வந்தடைந்தார்.
இராமேஸ்வரம் வந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் குடும்பத்துடன் தங்கினார். பின்னர் இன்று அதிகாலை இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தனது குடும்பத்துடன் வந்த அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் வேதமுழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்கோவிலிற்கு வந்த தமிழக ஆளுநர் முதலில் ஸ்படிகலிங்க தரிசனத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீரைப் பெற்றுக் கொண்ட பின்னர் அருள்மிகு இராமநாதசுவாமி சன்னதி, ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சந்நிதிகளில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். குடும்பத்துடன் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட தமிழக ஆளுநர் பின்னர் தனுஷ்கோடி சென்று அங்கு கடலின் அழகை ரசித்து விட்டு மீண்டும் அவர் தங்கியிருந்த தனியார் தங்கும் நட்சத்திர விடுதிக்கு சென்றார்
தமிழக ஆளுநர் இராமேஸ்வரம் வந்திருந்ததையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.